வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

சனி, 31 டிசம்பர், 2022

 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 29

 

உலகப் புகழ் பெற்ற கல்வியாளர், உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஐந்து முதுகலைப் பட்டங்கள் பெற்றவர், தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலி, ஃபிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற பல மொழிகள் கற்றுத் தேர்ந்த பன்மொழிப் புலமையாளர், சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிக்க உரையாளர், தேர்ந்த இதழாளர், தனிநாயகம் இதழியல் கல்லூரி நிறுவனர், முதல்வர், முனைவர், அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர்கள். எமக்கோ தோழர். எப்பொழுதும் எம்மைத் தோழர் என்றுதான் அன்போடு அழைப்பார்.

1. நெஞ்சம் நிறைந்தவர் (1986) 2. தமிழர் செல்வம் (1991) 3. உலகெல்லாம் தமிழ் முழக்கம் (1992) 4. தனிநாயக அடிகளார் (1993) 5. இத்தாலி நாட்டு வித்தகத் தமிழர் (1995) 6. நெஞ்சம் மறப்பதில்லை (1996) 7. வள்ளலார் காட்டும் ஆன்ம நேயம் (2008) 8. வரலாற்றில் புன்னைக்காயல் (2012) 9. தனிநாயகம் என்னும் தமிழ்நாயகம் (2013) போன்ற பல நூல்களை எழுதியவர்.

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலாளராக இருந்தபோது, 'இலக்கிய வட்டம்' என்கிற இலக்கிய அமைப்பை நிறுவி, திருச்சியிலுள்ள எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், நவீன இலக்கிய விமர்சகர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்.

1995ஆம் ஆண்டில் அமுதன் அடிகளாரின் குருத்துவ வெள்ளி விழாவின்போது நிறுவப்பட்ட ‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை’, சாதி, சமய, இன வேறுபாடு இன்றி சிறந்ததொரு தமிழ் எழுத்தாளருக்கு, ஆண்டுதோறும் ரூபாய் 15,000/- பணமுடிப்பும், 'அமுதன் அடிகள் இலக்கிய விருது'ம் வழங்கிச் சிறப்பித்தவர். அந்த விருதினைப் பெற்றவர்களில் நானும் ஒருவன்.

இலக்கியப் பணிக்காக 'செந்தமிழ்ச் செல்வர்' (1992) 'இதழியல் செம்மல்' (1993) 'இலக்கியத் தென்றல்' (1994) 'சமத்துவப் பேரொளி' (2005) 'தமிழ் மாமணி' (2005) 'நல்லிணக்கச் செம்மல்' (2006) 'மாமன்னன் இராசராசன் விருது' (2008) 'தமிழ் வளர் தகவர்' (2015) 'புலவர் மாமணி' (2016) போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.

இறுதியாக நாம் மொழிவது... அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர்கள் நம் திருச்சியின் பெருமை. அவரோடு நாம் வாழ்வது நமக்குப் பெருமை மட்டுமல்ல... பெரும் பேறு. அடிகளாரை வணங்கி மகிழ்வோம்.






கருத்துகள் இல்லை: