வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

வாழ்த்து வெளி......





அன்பான தோழமைக்கு,
வணக்கம்.

தங்களுக்கும்
தங்கள் இனிய குடும்பத்தினர்களுக்கும்
எமது இனிய 2011 புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

தோழமையுள்ள......
பாட்டாளி

 

திங்கள், 6 டிசம்பர், 2010

கட்டுரை வெளி......







தோழர் சு. அழகேஸ்வரன் அவர்கள்
கூர்மையான இடதுசாரிச் சிந்தனையாளர்.
நவீன இலக்கியங்களின் தீவீர வாசிப்பாளர்.
தன் வாழ்வின் பெரும்பகுதியை தொழிற்சங்கக் களத்திலேயே கழிப்பவர்.
திருச்சி படைக்கலத் தொழிலகத்தில் (OFT) நீண்ட காலப் பணி அனுபவம் உள்ளவர்.

தமிழியற் நூற் புலங்களில் இதுவரை கவனம் குவிக்கப்படாத எழுதப்படாத
இந்தியப் பாதுகாப்புத் துறை குறித்தும்
அதன் கொள்கைகள் குறித்தும்
படைக் கலத் தொழிற்சாலைகள் குறித்தும்
விரைவில் நூல் ஒன்று எழுதவுள்ளார்.
அதற்கான வெள்ளோட்டமே இக் கட்டுரை.

தோழமையுள்ள.....
பாட்டாளி


இஸ்ரேல் நாட்டுடனான இராணுவ உறவைத் துண்டிக்குமாறு
இந்திய அரசைக் கோருவோம்

- சு. அழகேஸ்வரன்

            டந்த 2008-ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தில் காசா (GAZA) பகுதியில் இஸ்ரேல் கொடிய தாக்குதலை நடத்திவருகிறது. எவ்வித வசதியும் இல்லாத பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பலையும் இஸ்ரேல் படைகள் தாக்கி வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு பாலஸ்தீனியம் அழைப்பு விடுத்து பிரச்சார நடவடிக்கைகளை (Boycott, De-invest and Sanctions (BDS) Movement) மேற்கொண்டுள்ளது. இந்த பிரச்சார இயக்கத்தை இந்தியாவில் முனைப்புடன் கொண்டுசெல்லும் நோக்கில் கடந்த செப்-23,24 தேதிகளில் “பாலஸ்தீனத்தில் அமைதி வேண்டும்” (A Just Peace for Paleastine) என்ற பொருளில் தலைநகர் டெல்லியில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய இடதுசாரித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய மணிசங்கர் அய்யர் அவர்களும், பாலஸ்தீன மக்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர். முஸ்தபா பர்கோடி, வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மன்சூர்கான், வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் மொய்தீன்கான், பாலஸ்தீனப் போராளிக் குழுக்கள் பேச்சாளர்கள், ஜமால் ஜீமா, ஜமால் ஜகல் கா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் இஸ்ரேலுடனான இராணுவ உறவை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்றும்” சர்வதேச அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.1

            பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் தேசபக்தி கொண்ட சிவிலியன் ஊழியர்கள் என்ற முறையில் இப்பிரச்சனை நம்முடன் நேரடித் தொடர்பு கொண்டதால் இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான புறக்கணிப்பு பிரச்சாரத்தை நாம் வலுவுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது. நேரடித் தொடர்பு என்று சொல்லும் பொழுது கீழ்க்கண்ட மூன்று விசயங்களை அர்த்தப்படுத்த விழைகிறேன்.

1. பாலஸ்தீன மக்களின் உரிமைக்கு ஆதரவு என்ற வரலாற்று பூர்வமான நிலைபாட்டிலிருந்து இந்திய அரசு தற்பொழுது இஸ்ரேல் சார்பு நிலைபாட்டிற்கு சென்று கொண்டிருக்கிறது.

2. ஆயுதத் தளவாட உற்பத்தியில் நாட்டின் சுயசார்பை கைவிட்டு இஸ்ரேல் நாட்டிடமிருந்து ஆயுதங்களை பெருமளவிற்கு இறக்குமதி செய்வது.

3. பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் நடத்திய ஊழலைக் காரணம் காட்டி பாதுகாப்புத் தொழிற்சாலைகளை கார்ப்பரேசனாக்கும் முயற்சிகள்.

1. திசைமாறிச் செல்லும் இந்திய அயலுறவுக் கொள்கை :

            இந்தியாவுடன் வரலாற்று சிறப்புமிக்க நட்பையும், உறவையும் கொண்டிருந்த அரபு மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் இந்தியா தற்போது நடந்துகொண்டு வருகிறது. 1948-ல் பாலஸ்தீனத்தை யூதர்கள் பகுதி, அரேபியர்கள் பகுதியென ஐ.நா சபை பிரித்ததை எதிர்த்து வாக்களித்த இந்தியா மிகுந்த தயக்கத்துடனே 1950-ல் இஸ்ரேலிய அரசை அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களின் உரிமையை இஸ்ரேல் பறித்ததை தொடர்ந்து, இந்தியா ஏறத்தாழ 40 ஆண்டுகள் இஸ்ரேலுடன் முறைசார்ந்த உறவு எதையும் வைத்துக் கொள்ளவில்லை. 1975-ல் ஜியோனிசம் (Zionism) என்பது இனவாதம் என்னும் ஐ.நா சபையின் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது.2

            ஆனால் சோவியத் யூனியன் தகர்ந்ததும் 1992-ல் ஏற்பட்ட உலக அரசியல் மாற்றங்களால் குறிப்பாக அமெக்காவின் நிர்ப்பந்தத்தின் கீழ் சில அரபு நாடுகள் இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொண்ட சூழலில் நரசிம்மராவ் அரசு இஸ்ரேலுடன் முறைப்படியான இராஜதந்திர உறவுகொள்ளத் தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து வந்த காங்கிரஸ், பா.ஜ.க அரசாங்கங்கள் மிகத்துரிதமாக இஸ்ரேலுடன் இராணுவ, பொருளாதார அரசியல் உறவுகளை வளர்க்கத் தொடங்கின. மேற்கு ஆசியா குறித்த இந்தியாவின் புதிய கொள்கையானது ஒருபக்கம் இஸ்ரேல் ஆதரவு என்றால் மறுபக்கம் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரிப்பது என்கின்ற அதன் பாரம்பரியமான கொள்கையை கைவிடுதல் என்பதாக அமைகிறது. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ளாத உலகத்தலைவர்களில் ஒருவர் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

            இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஸ்புல்லாக்கள் (HEZBOLLAH) சில இஸ்ரேலிய வீரர்களை கடத்தியதை காரணம்காட்டி லெபனான் மீது இஸ்ரேல் ஒரு போரைத் தொடங்கியபோது “ஹிஸ்புல்லா அமைப்பு இப்படி இஸ்ரேல் வீரர்களை கடத்தியிருக்கத் தேவையில்லை” என்று கூறியது. ஆனால் போர் தொடுத்த இஸ்ரேலை, இன்று காசாவில் உள்ள 50 லட்சம் பாலஸ்தீனர்களை முற்றுகையிட்டு உணவுக்கும், மருந்துக்கும்கூட வழியின்றி சாகடிக்க முயன்றபோதும் கண்டிக்கவில்லை.

2. பாதுகாப்புத்துறையில் நாட்டின் சுயசார்புக்கு மாறாக இஸ்ரேலைச் சார்ந்திருத்தல் :

            1997-ம் வருடம் இஸ்ரேலின் ஜனாதிபதி எஸ்ஸார் வைஸ்மேன் (Ezer Weizman) முதன்முதலாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அவர், அன்றைய இந்திய நாட்டு ஜனாதிபதி திரு.சங்கர் தயால் சர்மா மற்றும் பிரதமர் தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இருநாடுகளுக்குமிடையே முதல் ஆயுதத் தளவாட ஒப்பந்தம் போடப்பட்டது. தரையிலிருந்து விண்ணிற்குப் பாயும் பராக்-1 என்ற ஏவுகணை வாங்குவது சம்பந்தமாக முடிவு செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு இஸ்ரேலிய நீர்மூழ்கிக்கப்பல்கள் அணுஆயுதங்களைக்கொண்ட ஏவுகணைகளை இலங்கை கடற்கரையோரப் பகுதியில் சோதனை செய்ய இந்தியா துணைநின்றது. 1999-ல் கார்கில் போரில் இஸ்ரேல் இந்தியாவிற்கு போர்விமானங்களை அளித்தது. காஷ்மீருக்கு இராணுவ நிபுணர்களை அனுப்பி வைத்தது. 2001-ல் இருநாடுகளுக்குமிடையே கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக்குழு (Joint Defence Co-Operation Group) அமைக்கப்பட்டது. இதையொட்டி இஸ்ரேல் ஃபால்கான் அவாக்குகளை (Phalcon AWACKS) வாங்குவதென்று முடிவுசெய்யப்பட்டதுடன் இஸ்ரேலிய நிறுவனமான சோல்டானிடமிருந்து அதிநவீன பீரங்கி ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

            2003-ல் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவத் தொழிற்சாலையிலிருந்து வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. அதே ஆண்டில் இஸ்ரேலிய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் எலியேசர் ஸ்டாண்ட்பெர்க் இந்தியாவிற்கு வந்து இந்தியாவின் ஏவுகணை நிறுவனமான இந்திய விண்ணியல் ஆய்வு மையத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் (Indian Space Recerch Organaisation ISRO). 2004-ம் வருடம் 1.1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபால்கன் அவாக்குகளை வாங்குவதற்கும் 2005-ம் ஆண்டில் இஸ்ரேலிய விமானத் தொழிற்சாலையிலிருந்து 50 ஹெரோன் அவாக்குகளை வாங்க முடிவு செய்தது. 2008 ஜனவரி 21-ம் தேதியன்று ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள துணைக்கோள் ஏவுதளத்திலிருந்து இஸ்ரேலின் டெக்ஸ்சார் (Tecsar) என்னும் துணைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் டெக்ஸ்சார் தொழில்நுட்பத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட ரீசாட்-2 (Risat-2) செயற்கைக்கோளை 2009-ல் இந்தியா வடிவமைத்து விண்ணில் ஏவியது.3

            இன்றைய கட்டத்தில் ரஷ்யாவிற்கு அடுத்ததாக இஸ்ரேல் நாட்டிலிருந்துதான் இந்தியா அதிகமான யுத்தத் தளவாடங்களை இறக்குமதி செய்துகொண்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஊக்குவிப்போடு லெபனான் மீது இஸ்ரேல் 2006 ஆகஸ்ட் மாதங்களில் நடத்திய ஆக்கிரமிப்புப் போரை லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் வெற்றிகரமாக எதிர்த் தாக்குதல் நடத்தி எல்லையை விட்டு வெளியேற்றினார்கள். இந்த எதிர்த் தாக்குதலில் நவீன தொழில்நுட்பத்துடன் உருவான கட்யுஷா (Katyusha) போன்ற ஏவுகணைகளையும், ராடார் கருவியின் உதவியுடன் ஏவப்படும் சி 802 நூர் ஏவுகணைகளையும் பயன்படுத்தி இஸ்ரேலிய போர்க்கப்பலை ஹிஸ்புல்லா அமைப்பினர் செயலிழக்கச் செய்தார்கள்.4

            மேலும் ஆயுத உற்பத்தியில் இந்தியாவின் சுயசார்பை கைவிட்டு முழுக்க இஸ்ரேல் நாட்டைச் சார்ந்துள்ளதால் நமது ஆயுத உற்பத்தி பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, இஸ்ரேல் மிலிட்டரி இன்டஸ்ட்ரி இந்தியாவிற்கு ஆயுதம் வழங்குவதில் ஊழல் புரிந்துள்ளதால் தற்போது அந்த நிறுவனத்திடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்திய அரசு தடைசெய்துள்ளது. இதனால் இந்தத் தொழிற்சாலை ஒத்துழைப்புடன் Reverse Engineering முறையில் மேற்கொள்ளப்பட்ட 125 மார்க்-2 (125 Mark-2) என்ற உலோக ஊடுருவி உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி உலோக ஊடுருவி தொழிற்சாலை (HAPP) மற்றும் படைக்கலத் தொழிற்சாலை கமோரியாவும் (OFK) பாதிக்கப்பட்டுள்ளது.

            முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரின் விஞ்ஞான ஆலோசகராகவும், பாதுகாப்பு வளர்ச்சி அமைப்பின் செயலாளராகவும் பொறுப்பு வகித்தபோது இந்திய பாதுகாப்பு சுயசார்பு திட்டம் பற்றி கூறிய கருத்துக்களை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நிலையத்திற்கும், பாதுகாப்பு வளர்ச்சி அமைப்பிற்கும் “ஒத்துழைப்பு ஒப்பந்தம்” (Memorendom Of Understanding - MOU) கையெழுத்தான விழாவில் கலந்துகொண்ட அவர், “நாட்டின் பாதுகாப்பிற்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் நம்மால் உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும். தற்போது 40 சதவிகித தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரித்து வரப்படுகிறது. 2005-ம் ஆண்டில் இது 70 சதவிகிதமாக உயரும். 10 ஆண்டுகளில் நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு சுயசார்பு திட்டம் 1995 வகுக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றிபெறும்” என்று தெரிவித்தார். அந்த சுயசார்பு திட்டம் என்ன ஆயிற்று? கடந்த 15 ஆண்டுகளில் நாம் திசைமாறி பயணித்து வந்துள்ளதை நினைத்துப் பார்க்கும்பொழுது சற்று அதிர்ச்சியாக உள்ளது.

3. ஆயுத பேர ஊழலும், கார்ப்பரேசனாக்கும் முயற்சியும் :

            கடந்த ஆண்டு பணிஓய்வு பெற்ற படைக்கல வாரியத்தின் முன்னாள் தலைவர் சுதிப்தா கோஸ் (Sudipta Ghosh) பீகார், நாலந்தாவில் ஆயுத பிளாண்டுகளை நிறுவ இஸ்ரேல் நாட்டு இராணுவத் தொழிற்சாலையான இஸ்ரேல் மிலிட்டரி இன்டஸ்ட்ரிஸ் (Isreal Military Industry - IMI )-வுடன் நடத்திய பேரத்தில் ரூ.1200 கோடி ஊழல் புரிந்துள்ளார் என்று கடந்த 2009 மே மாதம் கைது செய்யப்பட்டார்.5 கடந்த 30.06.2010 அன்று புலனாய்வுத்துறை அவருக்கு குற்றப்பத்திரிகை (Chargesheet) வழங்கியுள்ளது.6

            2006 - 07 மற்றும் 2008-09-ம் ஆண்டுகளில் படைக்கல வாரியம் செய்துகொண்ட ஒப்பந்தங்களை தணிக்கை செய்து அறிக்கை அளிக்குமாறு தலைமைத் தணிக்கை அதிகாரியை (Controller and Auditor General of India) மத்திய அரசு பணித்தது. தற்பொழுது தலைமைத் தணிக்கை அதிகாரி அரசிற்கு அறிக்கையை அளித்துள்ளார். அவ்வறிக்கையில், பீகார் நாலந்தா தொழிற்சாலைக்கான ஆயுத ஒப்பந்தம் இஸ்ரேல் நாட்டுடன் செய்வதுபற்றி திட்டமிடுவதற்காக கடந்த மார்ச் 2008 விலை நிர்ணயக் குழு (Cost Negotation Committee) ஒன்றை பாதுகாப்பு அமைச்சகம் திரு. சுதிப்தா கோஸ் அவர்கள் தலைமையில் அமைந்தது. அந்தக் குழு அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான Bi - Modular Charge System BMCS-யை பெறுவதற்கான தொகை ரூ.941.13 கோடி என நிர்ணயம் செய்தது. ஆனால் அந்த மாதத்தில் அதற்கான ஒப்பந்தம் போடப்படாததால் டிசம்பர் 2008-ல் ஒப்பந்தம் செய்வது என முடிவு செய்து அப்போதைய தொகையாக ரூ.2160.51 என மறுநிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அமைச்சரவைக் குழுவிற்கு மேற்கண்ட திட்டத்தை அனுப்பி வைத்தபோது மார்ச் 2008-ல் நிர்ணயிக்கப்பட்ட தொகை குறித்து மூடிமறைக்கப்பட்டது.

            உண்மையில் ஆகஸ்ட் 2006-ல் ரூ.654.79 கோடிகளுக்கு அளிப்பதற்கு இஸ்ரேல் மிலிட்டரி இன்டஸ்ட்ரிஸ் ஒப்புதல் தெரிவித்திருந்தது. ஆனால் அதை ஏற்காமல் ஒரு சர்வதேச டென்டரை அறிவித்ததையொட்டிதான் பாதுகாப்பு அமைச்சம் இந்த டென்டரை முடிவு செய்வதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைத்தது. ஆகஸ்ட் 2006-ல் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கும், 2008 மார்ச்சில் நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பிற்குமிடையே உயர்வு என்பது 15 சதவிகிதம்தான். ஆனால் 2008 டிசம்பரில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட தொகையான ரூ.2160.5 கோடி என்பது முந்தைய மதிப்புயர்வு சதவிகிதமான 15 சதவிகிதத்திற்கு மாறாக 67 சதவிகிதமாக மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டது என்றும் இதுதான் ஊழலின் ஊற்று மூலம் என்றும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.7

            இந்த பேரத்தில் சுதிப்தா கோஸ் அவர்களுக்கும், ஐ.ஆ.ஐ-க்கும் இரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. சுதிப்தா கோஸ் ஊழல் புரிந்ததைக் காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதென்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது, பாதுகாப்பு அமைச்சகத்திலிந்து 4 அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு வாரியக் கூட்டத்தில் அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள். கூடுதல் பொது மேலாளர் மற்றும் அதற்கு மேலான அதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரத்தை வாரியத் தலைவரிடமிருந்து பறித்து இனிமேல் பாதுகாப்பு அமைச்சகமே இந்த நியமனங்களை மேற்கொள்ளும் என்று முடிவெடுத்தது. அத்துடன் இந்த ஊழலுடன் தொடர்புள்ள 7 நிறுவனங்களை தற்காலிகமாகத் தடை செய்தது. (Banned for the time being).

            பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவுகள் சம்பந்தமாக கடந்த ஜீன்- 2009 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ.கே. அந்தோணி அவர்களை சம்மேளனப் பிரதிநிதிகள் சந்தித்தார்கள். அப்பொழுது பாதுகாப்புத் துறையில் நிலவும் ஊழலைக் களைவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் சம்மேளனம் ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஊழலுக்குக் காரணம் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனம்தான் என்றும், எனவே ஆயுத கொள்முதல் நடவடிக்கைகளில் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை அரசு சார்ந்திருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பாக பாதுகாப்பு வாரியத்திற்கு பிரதிநிதிகளை அனுப்புவதென்ற முடிவையும், பாதுகாப்பு வாரியத்தலைவரின் அதிகாரத்தைப் பறிப்பது என்ற நடவடிக்கையையும் கைவிட வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையானது பாதுகாப்பு வாரியத்தை கார்ப்பரேசனாக மாற்ற எத்தனிக்கும் மறைமுக முயற்சிதான் என்று தெரிவித்தார்கள். இதை ஏற்காத பட்சத்தில் சம்மேளனம் போராட்ட இயக்கத்திற்குச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

            சம்மேளனத்தின் இந்தத் தலையீட்டிற்குப் பின்னர் தற்காலிகத் தலைவர் (Incharge DGOF) நியமனம் செய்யப்பட்டார். மேலும் புதுடில்லியில் வாரியத்தின் கூட்டத்தை அமைச்சகம் நடத்தியது. அக்கூட்டத்தில் நான்கு அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். தற்போது தெரியவருவது என்னவென்றால் பாதுகாப்பு அமைச்சகப் பிரதிநிதிகளில் நால்வரில் இரண்டு பேர் நிரந்தர அழைப்பாளராக (Permenent Invitees) வாரியக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும், ஏனைய இரண்டு பேரான, கூடுதல் செயலர் பாதுகாப்பு அமைச்சகம் (Additional Secretary MOD)-யும் கூடுதல் செயலாளர் உற்பத்தி (Additional Secretary DP) ஆகியோர் ஒருசில மாதங்களுக்கு மட்டும் கலந்து கொள்வார்கள் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

            இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்ரேல் கம்பெனி சம்பந்தப்பட்ட வேறுஒரு ஆயுத ஊழலைப் பற்றியும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 2000 வருடத்தில் கப்பலிலிருந்து ஏவப்படும் (Ship - mounted) இஸ்ரேலிய பராக் ஏவுகணைகளை (Barak Missaile System) தயாரிப்பில் ரூ.1300 கோடி ஊழலில் சம்பந்தப்பட்டதாக மத்திய புலனாய்வுத்துறை அக்-2004 அன்று இஸ்ரேலிய ஆகாய விமானத் தொழிற்சாலை (Isreal Aircraft Industris - IAI) மற்றும் டில்லி ஆயுதத் தரகர் சுரேஷ் நந்தா என்பவர் மீது வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு குறித்து முறையாக விசாரிக்க வேண்டுமென்றும், ஊழல் புரிந்த இஸ்ரேலிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இடதுசாரிக் கட்சிகள் கடந்த மார்ச் 2008-ம் வருடம் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதினர்.8

ஹிஸ்புல்லா என்பது என்ன?

            லெபனானிலும், உலகின் பிற பகுதிகளிலும் உள்ள “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு திறந்த மடல்” என்னும் ஆவணத்தின் மூலம் ஹிஸ்புல்லா (அல்லாவின் கட்சி) என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக லெபனானில் உள்ள சியா முஸ்லீம் மதகுருக்கள் 1995-ல் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர். 2000 ஜீலை-ஆகஸ்ட் மாதத்தில் தென் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கெதிராக அது நடத்திய உறுதியான தீரமிக்க இராணுவ நடவடிக்கையின் காரணமாக பிற எல்லா ஆயுதம் ஏந்திய குழுக்களை விட வலுமிக்கதாகவும், செல்வாக்குப் பெற்றுள்ளதாகவும் வளர்ந்துள்ளது. இது கொரில்லா தாக்குதல்களை நடத்தும் வெறும் ஆயுதம் ஏந்திய குழு மட்டும் அல்ல, ஓர் அரசியல் கட்சியாகும். தேசிய மற்றும் உள்ளூர்களில் நிலையான அரசியலில் ஊழல்கரைபடியாத ஒரே ஒரு தூய்மையான அரசியல் கட்சி அதுதான். லெபனான் உட்பட அரபு நாடுகள் முழுவதும் விடுதலையை தனது குறிக்கோளாகக்கொண்ட தேசப்பற்றுள்ள ஒரு அமைப்பு. லெபனானிய சமுதாயம் முழுவதுமே இப்போது ஹிஸ்புல்லாவை ஒரு தேசிய விடுதலை இயக்கமாகக் கருதுகின்றனர்.

ஜியோனிசம்

            2000 ஆண்டுகளாக உலகில் நாடற்றவர்களாக பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட, கடைசியில் நாஜிக்களால் பேரழிவிற்குள்ளாக்கப்பட்ட யூதர்களுக்கு உலக மக்கள் காட்டிய அனுதாபத்தை யூத மேட்டுக்குடியினர் ஜியோனிசம் என்னும் இனவெறித் தத்துவமாக மாற்றினார்கள். வறட்டுத்தனமான யூத மதக்கருத்துக்கள் அதிதீவிர தேசிய வெறி ஆகியவற்றின் கலவைதான் ஜியோனிசத்தின் கருத்துநிலைக் கோட்பாடுகளாகும். யூத மக்கள் “தன்னிகரற்ற தேசம்” என்றும், அவர்கள் மரபின - பண்பாட்டு வகையில் மற்ற எல்லா தேசங்களைவிடவும் மேன்மையானவர்கள் என்றும் ஜியோனிசம் கூறுகிறது. இதுவே இஸ்ரேலிய தேச அரசின் கருத்துநிலையாகவும் மாறிப்போனது.

ஆதாரம் :

1. A Report of the two days conference of “A Just Peace for Palestine” www.pragoti.org/nod/4148

2. யுத்த பூமியாகும் லெபனான் - எஸ்.வி.இராஜதுரை - பக்.129

3. India – Isreal realations from wikipedia.

4. யுத்த பூமியாகும் லெபனான் - எஸ்.வி.இராஜதுரை - பக்.93

5. Times of India - 6.6.2009.

6. CBI Press release /New Delhi/30.06.2010.

7. Comptroller and Auditer General of India. Report No. 15 of 2010 - 2011.

8.Letter of Left Partys to PM. Dated : 21.03.2008. www.alterinter.org/article1914.

குறிப்பு: ஜியோனிசம் மற்றும் ஹிஸ்புல்லா பற்றிய விளக்கங்கள் மேற்படி மார்க்சீய அறிஞர் எஸ்.வி.ஆர் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

சனி, 27 நவம்பர், 2010



தமிழ்த் தேசியத்
தன்னுரிமைப் போரில்......
இன்னுயிர்களை ஈந்த
மாவீரர்களுக்கு......
செங்காந்தள் மலரெடுத்து
வீர வணக்கம்
வீர வணக்கம் செய்கிறோம் தோழர்களே.
                                         
                                                                       பாட்டாளி





வியாழன், 21 அக்டோபர், 2010

பகிர்வு வெளி......

நாம் இருப்பது என்ன 21ம் நூற்றாண்டிலா?
                                   
                 அடிமைக் காலத்திலா?

          ஒரு புறம்...... அணு சக்தி, நியூட்ரினோ, நானோ தொழில் நுட்பம், கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஈமெயில் என..... ஏன்? திருவரங்கம் அரங்கநாத சுவாமிகளே வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் இந்த அறிவியல் தொழில் நுட்ப அபரிமித வளர்ச்சி காலத்தில்.....
          மற்றொரு புறம்...... இருண்ட புறமாக, பழைய அடிமைக்கால மிச்ச சொச்சமாக, மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிச் சுமந்து செல்லும் மடமைப் பழக்க வழக்கத்தைக் கொண்ட திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மறுபுறம்.
          திருவரங்க கோயிலில் வேதபாராயணம் வாசிப்பது, பிரபந்தங்களை இசைப்பது, போன்ற தொழில்களைச் செய்யும் வேதவியாச பட்டர் குடும்பத்தினர், பராசர பட்டர் குடும்பத்தினர், அறையர் குடும்பத்தினர் ஆகியோர்களை கோயிலிலிருந்து அவரவர் வீடு வரை பல்லக்கில் தோள் கடுக்கச் சுமந்து சென்று, வீடுகளில் இறக்கி விடுவது ஆண்டாண்டு கால பரம்பரைப் பழக்க வழக்கமாம். நாம் இருப்பது என்ன 21ம் நூற்றாண்டிலா? அல்லது அடிமைக் காலத்திலா?
          அடுக்காத பழக்க வழக்கம் இது. மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் மூடப் பழக்க வழக்கம் இது என மனித நேயங் கொண்ட, மனித உரிமை நோக்கு கொண்ட, கோயிலின் இணை ஆணையர் அவர்கள், "திருக் கோயில் வழிபாடு செய்யும் இறைவனைத்தான் பல்லக்கில் தூக்கிக் கொண்டு செல்வது முறையாகும். அவ்வாறின்றி பல்லக்கில் மனிதனை மனிதனே தூக்கிக் கொண்டு செல்வது தவிர்க்க வேண்டிய செயலாகும்". எனவே, இந்த மனிதகுல விரோத மூடப் பழக்க வழக்கத்தை ரத்து செய்ய முயற்சி எடுத்திருக்கிறார்.
          உண்மையிலேயே மனிதராய் இருப்பவர்கள் மனமுவந்து வரவேற்கும் முயற்சி இது. ஆனால், மேற்படி பட்டர் கும்பல்களோ இணை ஆணையர் மீது வழக்குப் போட்டு, பத்து லட்ச ரூபாய் நட்ட ஈடு கோரியுள்ளார்கள்.
          மனித நேயங் கொண்ட, மனித உரிமை நோக்கு கொண்ட, முற்போக்கு சனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து, இணைந்து நின்று, பிற்போக்குவாத பார்ப்பன சனாதன சதிகளை முறியடிக்க, தொடரும் இந்த அடிமை முறையை, இழி செயலை ஒழித்துக் கட்ட, கரம் கோர்க்க வேண்டிய தருணம் இது.

வரவேற்கிறோம். வரவேற்கிறோம்.

திருவரங்கம் கோயிலில் மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிச் செல்லும் அடிமை முறையை ரத்து செய்யும் முயற்சியை வரவேற்கிறோம்.

கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம். வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வழக்கு, நட்ட ஈடு என்ற பெயரில் பூச்சாண்டி காட்டும் வேத வியாச பட்டர் உள்ளிட்ட பட்டர் கும்பல்களை கண்டிக்கிறோம்.

சனநாயக சத்திகளே ஒன்று திரள்வோம்.

பிற்போக்குவாத பார்ப்பன சனாதன (அ)தர்மத்தை முறியடிப்போம்.



வெள்ளி, 15 அக்டோபர், 2010




பகிர்வு வெளி......

உண்டு உறங்கிய புழங்கு வெளிகளிலிருந்து துரத்தப்படும்.......

          இன்றைக்கு தமிழர்களிடம் இரு போக்குகள் காணப்படுகிறது. ஒன்று இயற்கை மற்றும் பிற உயிரினங்கள் மற்றும் உயிரற்ற கல் மண் மழை வான் போன்றவற்றை வணங்குவது. மற்றான்று அவற்றைச் சூறையாடுவது. என்ற இருபோக்குகள் காணப்படுகிறது. இது மிகவும் வினோதமானதாகும். இருவேறு எதிர் எதிரான முனைகள். ஒன்று வணங்குவது அல்லது அடிமையாக இருப்பது. மற்றது அதையே அழிப்பது அல்லது சீரழிப்பது........

          சரியாகச் சொல்வதானால் இயற்கை பற்றிய ஒரு சரியான அறிவியல் பூர்வமான அறிவே இன்னும் தமிழர்களுக்கு உருவாகவில்லை என்பதுதான் யதார்த்தமே. நாகப்பாம்பு (நல்லபாம்பு) என்று வணங்கும் அதே மக்கள்தான் அப்பாம்பைக் கண்டவுடன் அடித்துக் கொன்று முட்டை பால் பச்சரிசி வைத்து புதைத்து வணங்கி நயினார் (நாகநாதர்) கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைக்கின்றனர்.

          பாம்புகளுடன் சகஜ உறவு கொள்ளும் மேலைநாடுகளின் பண்பு வியக்கத்ததக்கதாக இருக்கிறது. பாம்பு வகைகளை கொடிய விசமுள்ளவை, விசமற்றவை என்று பிரித்து, அவற்றை அணுகும், கையாளும், வீடுகளில் வளர்க்கும், மேலை நாடுகளின் பண்பும், பாம்பு, பல்லி, பூச்சி வகைகளை உணவாகக் கொள்ளும் கீழைநாடுகளின் பண்பும் இங்கு இல்லாமல், பாம்பை கடவுளாக வணங்கும் போக்கு தமிழர்களிடம் இன்றும் நீடிப்பது ஏன் என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

          ஆனால், அதே தமிழகத்தில்தான் தோலுக்காக பல நூறு பாம்புகள் கொல்லப்படுவதும் அரியவகைப் பாம்பினங்கள் அழிந்து போவதும் நிகழ்கிறது. இதனுடன் அய்யப்பனின் வாகனமான புலி தோலுக்காக கொல்லப்படுவதையும், பிள்ளையாரின் மறு உருவமான யானை, தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதையும் கூட இணைத்துக் கொள்ளலாம். இம்முரண்பாடுகளின் இணைவுதான் இன்றைய தமிழகத்தின் சமூக யாதார்த்தமாகும்.

          இத்தகைய பின்னணியில்தான் கடல் குறித்த தமிழர்களின் அணுகுமுறையும் காணவேண்டியள்ளது. கடலைப் புனிதாமாகக் கருதி வணங்கும் இதே நாட்டில்தான் கடலையும், கரையையும், கடல் வளங்களையும் சீரழிக்கும் வழக்கம் நடந்தேறிவருகிறது. சமவெளி மனிதர்களைப் பொறுத்தவரை, கடல் தங்களது உணவில் ஒன்றான மீனைத் தரவல்லது. ஆனால், எத்தனைபேர் மீனைப் பார்த்தவுடன் கடலை நினைப்பார்கள் என்று தெரியவில்லை.

          கடல் பகுதியிலிருந்து வெகு தூரத்தில் மையப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கு மீன் என்றவுடன் மீன் சந்தை மட்டுமே நினைவுக்கு வரும். இந்துக்களைப் பொறுத்தவரை கடல் என்பது வருடத்திற்கு ஒரு முறை தங்களது இறந்த முன்னோர்களுக்கு திவசம் கொடுக்கும் புண்ணியஸ்தலம் மட்டுமேயாகும்.

          வேறு சிலருக்கு சுற்றுலாத்தலம். மேலும் மாலை நேரத்தில் பொழுதுபோக்கும், காத்து வாங்கும் கடல் கரை. தங்களது உடல் பருமனைக் குறைக்க நடைபயிலும் நீண்ட நடை பாதை. இவ்வாறு மீன்பிடியல்லாத சாதியினருக்கு கடல் பலவாறு அவர்களது சிந்தனையில் பதிந்து போயுள்ளது.

          இந்தச் சமவெளி மனிதர்களை மையமாகக் கொண்ட அரசு, அதிகார வர்க்கம், ஆளுவோர் ஆகியோரும் இவ்வாறே கடலைப்பற்றிக் கருத்துக் கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே மீனவர்களை, கடலின் குழந்தைகளை, கடல்கரையைவிட்டு விரட்டிவிட்டு அவ்விடங்களையெல்லாம் சுற்றுலாத்தலமாக, சமவெளி மனிதர்களின் உல்லாச வெளியாக மாற்றுவதற்கு முற்படுகின்றனர். மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்திய, மீன்களை காயவைத்த, உண்டு உறங்கிய புழங்கு வெளிகள் எல்லாம் சுருங்கி வருகிறது. இந்த அறிவு நாணயமற்ற செயல்களை எதிர்த்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.

          ஆனால், உண்மையில் கடலையும், கடல்கரைப் பகுதிகளையும் அசுத்தப்படுத்துபவர்கள், சுற்றுச் சூழலைக் கெடுப்பவர்கள் சமவெளி மனிதர்கள்தான். இந்துக்கள் ஆடி அமாவாசை, தை, மாசி அமாவாசை தினங்களில் பலலட்சம் பேர் ஒரே நேரத்தில் ஒன்று கூடி கடற்கரைப் பகுதியில் மலஜலம் கழித்து, குப்பை கூளங்களைக் கொட்டியும் சீரழிக்கின்றனர். மேலும் சமவெளி மனிதர்கள் புதிய புதிய வடிவில் கடலை அசுத்தப்படுத்துகின்றனர். இவர்களது வீட்டுக் கழிவுநீர் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்ட குழாய் மூலம் கடற்கரையில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. பணவெறி பிடித்த இறால் பண்ணை முதலாளிகள் இரசாயனக் கழிவு நீரை குழாய் மூலம் கடலில் கலக்க விடுகின்றனர். இராமேசுவரம் தீவைப் பொருத்தவரை இதே சாதி இந்துக்கள் மறு புறம் கடல் நீரைப் புனிதம் என்று கூறி, தங்கள் வீடுகளில் இறந்தவர் உடலை கடலில் இருந்து நீர் எடுத்து (நீர்மாலை) வந்து குளிப்பாட்டுகின்றனர். குழந்தை பிறப்பு முதல் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளின் போதும் தீட்டுக்கழித்தல் என்ற பெயரில் கடல் நீரைக் கொண்டுவந்து வீடுகளில் தெளிப்பர்.

          முளைப்பாரி திருவிழாவின் போது, இராமேசுவரத்தில் மாரியையும், மாரியம்மன் (களிமண்ணால் செய்யப்பட்ட) சிலையையும் இறுதியில் கடலில் (அக்னிதீர்த்தம்) வந்தே கரைப்பார்கள். அதேபோல் விநாயகர் சதுர்த்தியின் மறுநாள் ஊரின் ஒட்டு மொத்த விநாயகர் பொம்மைகளும் (களிமண்ணால் ஆனது) கடலில் வந்தே போடப்படும். ஆனால், தற்போது இச்சிலைகள் ஆர்.எஸ்.எஸ்சின் வளர்ச்சிக்குப் பிறகு மிகப்பெரியதாக வளர்ந்தும், களிமண் அல்லாத பிற பொருட்களால் செய்யப்பட்ட, 1 வாரம் வரை வைத்து பூஜிக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு சென்று, கடலில் மூழ்கடிக்கின்றனர். இதனாலும் கடல் மாசுபடுகிறது.

          இவ்வாறு சமவெளி இந்துக்கள் கடலையும் கரையுயும் பல்வேறு வழிகளில் சீரழிப்பதைக் கண்டு கொள்ளாத அரசு, 'மீனவர்கள் கடற்கரை அழகைக் கெடுக்கின்றனர்' என்று கூறி, அவர்களை அப்புறப்படுத்தி, அவ்விடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்கா, கேளிக்கை விடுதிகளை அமைத்து, அதனையும் ஆதிக்கசாதி வர்க்கத்தினருக்கு குத்தகைக்குவிட்டு, அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கு வழிவகை செய்து கொடுக்கிறது.

குமரன்தாஸ்

 “சேதுக்கால்வாய்த் திட்டமும்
ராமேஸ்வரத் தீவு மக்களும்” நூலிலிருந்து......


குறிப்பு :

தோழர் குமரன்தாஸ் எழுதிய “சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேஸ்வரத் தீவு மக்களும்” நூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய “இலக்கியப் போட்டி 2010”க்கான பரிசினைப் பெற்ற நூல் ஆகும்.



சனி, 11 செப்டம்பர், 2010

பகிர்வு வெளி......





அன்பான தோழமைக்கு,
வணக்கம்.
பகிர்தலுக்காக ஒரு செய்தி.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் மற்றும்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கும்
"இலக்கிய விருது 2009"க்கு
தோழமை பதிப்பகம் வெளியிட்ட எமது நூலான
"சக்திமான்களும் பூம் பூம் ஷக்கலக்கவும்"
(தமிழ்ச் சூழல் மீதான மீளாய்வுக் கட்டுரைகள்)
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா
எதிர் வரும் 08.10.2010 அன்று
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும்.


தோழமையுள்ள...........
பாட்டாளி.

ஞாயிறு, 13 ஜூன், 2010

பகிர்வு வெளி......

முடக்கி வைக்கப்பட்டிருந்த
தந்தை பெரியாரின் குடிஅரசு இதழ் தொகுப்பினை
வழக்கு மன்றம் விடுவித்தபின்
பெதிக தோழர்கள் தங்கள் 10 ஆண்டு கால உழைப்புகளை,
சகலத்தையும் காசாக்கிட வேண்டும் என்று
வெறிகொண்டு அலைந்து திரியும்
இந்த உலகமயச் சூழலில்,
தேடித் தேடி அலைந்து தொகுத்து,
பல இலட்ச ரூபாய் பொருட் செலவினைக் கூடப் பொருட்படுத்தாது,
தந்தை பெரியாரை பலருக்கும்
குறிப்பாக அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில்
அச்சிட்ட 28 தொகுப்புகளையும் இலவசமாக அளித்து,
தமது வலைத்தளத்தில் இலவசப் பதிவேற்றம் செய்துள்ளார்கள்.
நீங்கள் http://www.periyardk.org/ சென்று
பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறுக

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கவிதை வெளி



மனித முகங் கொண்ட.......

ஆனந்தக் கூத்தாடுகின்றன
ஆக்டோபஸ்கள்.


புதிதாய் முளைத்திருக்கும்
மனித முகங் கொண்ட
முகமூடி கண்டு.


இனி
வளைக்கும் சிரமமில்லை
கரங்களுக்கு.
வாயைத் திறந்து வைத்தாலே
போதும்.


ஆக்டோபஸின்
தரகு முதலைகள்
பெருத்து வீங்கிப் போயிருந்த
தனது உடம்புகளை
சுருக்கிக் காட்டி
ஓலமிட்டன.


இரக்கம்
முளைத்துக் கிளைத்திட
தேற்றுதல்
மொழி உதிர்த்தன
நரிகள்.


தரகு முதலைகளின்
ஆக்டோபஸ்களின்
வஞ்சங்களைப்
பால பாடமாகப்
புரிந்து கொண்டிருந்த
காவல் சிங்கங்களோ
வால்களை
இடுக்கில் ஒடுக்கிக் கொண்டு
இளித்தன.


பொலிவேறியது
மனித முகங் கொண்ட
உள்ளூர் உண்ணிகளுக்கு.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பகிர்வு வெளி......

"கரூர் மாவட்டத்தில் அண்மையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 20 நாள்களாகக் குடிநீர் வரவில்லை.
இது குறித்து பொதுமக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு பொதுமக்களுக்கு சரியான முறையில் பதிலும் அளிக்கவில்லை. பொறுத்திருந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, ஊராட்சித் தலைவர் வர வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அவரோ தான் ஒன்றும் சும்மா ஜெயித்து விடவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றுள்ளேன். எனவே அவர்கள் கூப்பிடும் போதெல்லாம் என்னால் வர முடியாது என்று பதிலளித்தாராம்.
இதனால் விரக்தியுற்ற பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை வேறு வழியில்லாமல் போலீசாரின் உறுதி மொழியை ஏற்று முடித்துக் கொண்டனர்."
'திருப்பித் தாக்கும் பண ஆயுதம்'
எஸ்.முத்துக்குமார்
தினமணி நாளிதழ் நடுப்பக்க கட்டுரை
27.03.2010 சனிக்கிழமை

ஒரு சமூகத்தையே குற்றமயச் சமூகமாக்கி வைத்திருக்கும் 'திருமங்கல பார்முலா'க் காரர்களுக்கு இந்த பகிர்வு வெளி சமர்ப்பணம்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கட்டுரை வெளி

வினை - எதிர் வினைக்கு மறு வினை
- பாட்டாளி

"ikindhu.blogspot.com" 2009/07 வலைப்பக்கத்தில் வெளியான 'வினை எதிர் வினை' 'நக்சல்பாரியின் முன்னோடி' என்ற விமர்சனக் கட்டுரை "புதிய பயணம்" இதழில் வெளியான கவிஞர் இன்குலாப் அவர்களின் நேர்காணல் குறித்து தவறாக எழுதப்பட்டிருப்பதால், நேர்கண்டவர்களுள் ஒருவன் என்கிற முறையில் அதற்கு விளக்கமளிக்க வேண்டியது எனது பொறுப்பாகிறது.
பொதுவாக, எந்தவொன்றையும் மூலத்தை முறையாகப் படித்தால்தான் திரிப்பு வேலைகளை வெளிப்படுத்திட முடியும். எனவே, நாம் நேராக மூலத்தை ஒரு முறை படித்து விடுவது நல்லது. புதிய பயணம் நேர்காணலில் ப.9ல் கவிஞர் இன்குலாப் கூறுகிறார்,
"சனவரி 26 குடியரசு நாள் போராட்டத்துக்கு நாங்கள் தயார் பண்ணிக் கொண்டிருக்கும் போது காளிமுத்துவும் காமராசனும் ஒரு முடிவுக்கு வந்தனர். சட்டப்பிரிவை எரிக்கிறதுன்னு யாருகிட்டயும் சொல்லாமலேயே தீ வைத்துக் கொளுத்தினாங்க. என் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் அடிபடுவது போராடுவது என்ற உணர்வோடு இருந்தோம். சனவரி 25ம் தேதி இவங்க கைதாகிறாங்க. இந்தச் செய்தியைப் பரப்பணும்கிற பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன். மதுரை முழுவதும் நோட்டீஸ் விநியோகிக்கணும்கிற பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன். வெளியே தெரிந்தால் கைது செய்யப்படுவோம் என்ற நிலை. மாணவர்கள் கையில கொடுத்து நாலா திசைக்கும் அனுப்பிவிட்டு பின்னாடியே செல்வோம். நோட்டீசு முழுவதையும் ஒரு மணி நேரத்தில் விநியோகிச்சு முடிச்சோம்".
இதுதான் கவிஞர் இன்குலாப் அவர்களின் கூற்று. புதிய பயணத்தில் இருப்பதும் இதுதான். ஆனால் கட்டுரையாளர் இந்து(?) சொல்வதுபோல, "துண்டறிக்கை விநியோகச் செயல்திறன் பார்த்து ஆச்சர்யப்பட்டு காவல்துறை ஆய்வாளர், இதை யாரோ ஒரு நக்சல்பாரிதான் செய்தான் அப்படீன்னு பயந்தான்" என்று சொல்கிறார். (கதவு மார்ச் 2010 ப.11) கவிஞர் இன்குலாப் அவர்கள் சொல்லாத காவல்துறை அதிகாரி இங்கு எப்படி வந்தான்? தவிரவும் 'நக்சல்பாரி' என்ற சொல்லாடல் மேற்குறிப்பிட்ட அந்தப் பகுதியில் எங்கிருக்கிறது? நேர்காணலை ஒழுங்காகப் படிக்காத அல்லது படிக்கவியலாதபடி காழ்ப்பு கண்களை மறைக்க, தானாகவே உள் நோக்கம் கற்பித்துக் கொண்டு, காழ்ப்பும் ஒவ்வாமையும் ஒருங்கே கொண்டு கட்டுரையாளர் இந்து(?) இப்படி மனம் போனபடி நேர்காணலைத் திரிக்கிறார். அதை விமர்சனம் என்ற பெயரில் எழுதி வாசகர்களுக்குத் தவறாகப் பரப்புகிறார்.
உண்மையில் நக்சல்பாரிகளின் துண்டறிக்கை விநியோகத்திறன் பற்றி கவிஞர் இன்குலாப் பிற்பாடுதான், அதையும் தெளிவான வார்த்தைகளில் சொல்லுகிறார். அதை வாசகர்களுக்கு அப்படியே தருகிறோம்.
"அந்த அனுபவம் (மதுரையில் மேற்குறிப்பிட்ட பேராட்டத்தில் துண்டறிக்கை விநியோகித்த அனுபவம் - பாட்டாளி) நியூ காலேஜ் போராட்டத்தில் எனக்குப் பயன்பட்டது. (அடிக்கோடு எம்முடையது) நிர்வாகத்தை அம்பலப்படுத்த முடிவு செய்தோம். கைது ஆனவர்கள் ஆபீஸ் செக்கரட்டரி மற்றும் கரஸ்பாண்டன்ட் பெயரைச் சொல்லவே பயப்படுவாங்க. அவர் செய்த ஊழல்களைச் சுருக்கமா எழுதி, நண்பர்கள்ட்ட கொடுத்து தொழுகை நடக்கிற பள்ளிவாசல்கள் எல்லாத்திலேயும் விநியோகிக்கச் சொல்லி அனுப்பி வைச்சேன். பெரிய மேடு பள்ளி வாசல்ல அவர் தொழுதுகிட்டார். அவர் தொழுகை முடிச்சு வெளியே வந்தவுடனே, நேரிலேயே அவர் கையில் கொடுத்து விட்டேன். படிச்சுட்டு நிமிர்ந்தா யார் கொடுத்தான்னு தெரியாது. எல்லா பள்ளிவாசல்லயும் விநியோகமானதைச் தெரிஞ்சு நடுங்கினான். இதை யாரோ ஒரு நக்சல்பாரிதான் செய்தது அப்படீன்னு பயந்தான். அது மாதிரி நாங்க மதுரையில விநியோகிச்சோம்". (அடிக்கோடு எம்முடையது) புதிய பயணம் ப.9-10.
கவிஞர் இன்குலாப் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியிருப்பதை அடிக்கோடிட்டுள்ளேன். அந்த அனுபவம் பின்னாட்களில் நியூ காலேஜில் பணிபுரிந்தபோது உதவியது என்றும், அந்த நியூ காலேஜ் துண்டறிக்கை விநியோகம் போலத்தான் மதுரையில விநியோகிச்சோம் என்று மிகத் தெளிவாகக் கூறுகையில், (கவனிக்க: இந்த இடத்திலும் அந்த காவல்துறை ஆய்வாளன் வரவே இல்லை) கட்டுரையாளர் இந்து(?) தானடித்த மூப்பாக இட்டுக் கட்டிக் கொண்டு '65களிலேயே நக்சல்பாரியினை முன்னறிந்து சொல்லியவர்' என்று ஏகத்துக்கு இட்டுக் கட்டி கிண்டலடிக்கிறார். கட்டுரையாளர் இந்து(?) கலவரப்பட்டு எழுதும் அந்தக் காவல்துறை ஆய்வாளர் உண்மையில் எப்போது வருகிறார் தெரியுமா? கவிஞர் இன்குலாப் சொல்கிறார்,
"காளிமுத்துவும் காமராசனும் கைதான பிறகு போராட்டம் எங்க கையில இருந்தது. ஆகஸ்டு 15 அன்றைக்கு கருப்புக்கொடி ஏத்துறதுன்னு (அடிக்கோடு எம்முடையது) கல்லூரிக்குள்ளயே ஏற்பாடு நடந்தது. போலீசுக்காரங்க கல்லூரிக்கு வெளியே நிக்கிறாங்க. திடீரென்று ஒரு டிஎஸ்பி உள்ளே வரவும் மாணவர்கள் ஓடத் தயாராக நான் ஓடாதீங்கன்னு சொல்ல...." (புதியபயணம் ப.10.)
ஆக, ஜனவரி 26ல் காளிமுத்து நா.காமராசன் கைதுக்கான துண்டறிக்கை விநியோகப் போராட்டம் நடந்தது. அதற்குபின் கி†டத்தட்ட ஏழு மாதங்கள் கழித்து ஆகஸ்டு 15ல் நடந்த போராட்ட அனுபவத்தைச் சொல்கிறபோதுதான் அந்த காவல்துறை வருகிறது. உண்மை இப்படியிருக்க, பின்னாடி வரும் காவல்துறை ஆய்வாளரை (அவர் கூட காவல்துறை ஆய்வாளர் அல்ல. டிஎஸ்பிதான்) முன்னரே வலியக் கொண்டு வந்து சேர்த்துக் குழப்பி, அவதூறு பரப்பும் க†டுரையாளர் இந்து(?)வுக்கு நாம் கூட கொடுக்கலாம் ஒரு பட்டம் "இட்டுக் கட்டுதலின் முன்னோடி" என்று.
அடுத்து கட்டுரையாளர் எழுப்பியிருக்கும் இரண்டு கேள்விகள் குறித்து. ஏன் புதிய தலைமுறை பற்றிப் பேசவில்லை? புதியமனிதன் குறித்துப் பேசவில்லை? என்பது குறித்து.
முதலில் அந்த நேர்காணல் என்பது இன்குலாப் என்கிற ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் செய்யப்பட்டதில்லை. அப்படிச் செய்திருந்தால்தான் அவரின் பத்திரிகை பணி குறித்துச் சென்றிருக்கும். புதியமனிதன் குறித்துக் கேட்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த நேர்காணல் என்பது, ஏதோ மொழிப் போராட்டம் என்பதை ஏகத்துக்கும் குத்தகை எடுத்தது தாங்கள்தான் என்று இன்றுவரை தம்பட்டம் அடித்துத் திரியும் திராவிட கட்சிகளுக்குப் பதில் சொல்லவும், பொதுவுடைமை இயக்கத்தார்க்கும் அதில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்பதை முகாமையாய் நிலை நிறுத்துவதையும் கொண்ட நேர்காணல் அது. இறுதியாக இன்றைய இடதுசாரி எழுத்தாளர்களின் நிலை குறித்துச் சொல்வதன் மூலம் நேற்றைக்கும் இன்றைக்குமான இடைவெளிகளை வெளிக் கொணரவே அந்த இரண்டாம் கட்டம்.
அடுத்து இந்த மறுவினையைப் படித்தாலே தெரியும். ஒழுங்கு படுத்தப்பட வேண்டியது யாரென்று. நிச்சயமாக புதியபயணம் இதழ்க் குழு அல்ல. மாறாக, இந்து(?) என்ற சனாதனப் பெயரில் மறைந்திருக்கும் கட்டுரையாளர்தாம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியவர் என்பது வாசகர்களுக்கே புரியும்.
அடுத்து, கட்டுரையாளர் இந்து(?) முன் வைக்கும் சில விபரப் பிழைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமையும் எமக்கு உண்டு. "1968ல் புதிய தலைமுறை பத்திரிகை தொடங்கி 1970வரை தொடர்ந்து நடத்திய" என்று ஒரு தகவல் அளித்துள்ளார் கட்டுரையாளர். அது பிழையான தகவலாகும். உண்மையில் புதிய தலைமுறை காலகட்டம் என்பது 1967முதல் 1969வரை ஆகும். புதிய தலைமுறையின் முதல் இதழ் 1967 ஜூலை மாதம் வெளிவந்தது. (ஆதரம் - புதிய தலைமுறை (1967 - 1969) பார்வையும் படைப்பும். ப.தமிழரசி. நிகழ் வெளியீடு ப.24) அதாவது 1967 மே 25 மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டம் நக்சல்பாரியின் வரலாற்றுப் புகழ் மிக்க விவசாயப் போராட்டம் துவங்கிய (ஆதாரம் - நக்சல்பாரியின் புகழ் மிக்க முப்பதாண்டுகள். CPI (ML) மத்திய கமிட்டி வெளியீடு. ப.1) அடுத்த இரண்டாவது மாதத்திலேயே புதிய தலைமுறை இதழ் வந்து விடுகிறது.
அடுத்து கட்டுரை முழுக்க 'இன்குலாப்' என்ற பெயரைச் சொல்லக் கூசிடும் 'இந்து'(?) என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துத்துவ சனாதனக் குரல், கட்டுரை முழுக்க அவரை 'சாகுல் ஹமீது' என்று சொல்லிடும் அரசியல், உங்களால் 'பேசப்பட்ட வார்த்தைகளிலும் வெளிப்பட்டு' விடுகிறதே இந்து(?).
மொத்தத்தில் காழ்ப்பு, வெறுப்பு, ஒவ்வாமை இதனோடு ஒருவர் வாசிப்பை அணுகினால் அது இப்படித்தான் போய் முடியும் என்பதற்கு நாம் அளித்த பட்டத்திற்குரியவரான "இட்டுக் கட்டுதலின் முன்னோடி" இந்து(?)வே சாட்சி.

கவிதை வெளி

ஒன்றேனும்........


தேடிக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு
காதல் கவிதையை.

ஆண் மய்யச்
சிந்தனையழிந்த
இணை உயிர்ப் புரிதலோடு.