வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

சனி, 22 ஜனவரி, 2011

கட்டுரை வெளி......





நேரடி வரிவிதிப்புக்கொள்கை
வரைவு அறிக்கை மீதான விவாதங்களும் - திருத்தங்களும்

- சு.அழகேஸ்வரன்

            அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் செலவுகளுக்கு அடிப்படையானது அதன் வரிவருவாய். இந்த வருவாய் நேரடி வரிகள் மூலமாகவும், மறைமுக வரிகள் மூலமாகவும் திரட்டப்படுகிறது. நேரடி வரிகள் என்பவை குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் ஈட்டுகின்ற வருமானம் மற்றும் சொத்துகள் மீது விதிக்கப்படுபவை. மறைமுக வரிகள் என்பவை சரக்கு உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, சேவைப் பணிகள் தொடர்பாக விதிக்கப்படுபவை. இதில் மறைமுக வரிகளின் சுமையானது, சரக்குகள் மற்றும் சேவைகளை உபயோகிப்பவர்களான பொதுமக்கள் மீதே விழுகிறது. நேரடி வரிகள் மட்டுமே வரி செலுத்தக்கூடிய நபரின் அல்லது நிறுவனத்தின் வருமானம், சொத்து ஆகியவற்றின் மதிப்பைப் பொருத்து அந்தந்த நபர் அல்லது நிறுவனத்தின் மீது விழுகின்ற சுமையாகும்.

            அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரிவருவாயில் மறைமுக வரிகளின் பங்கு குறைவாகவும், நேரடி வரிகளின் பங்கு கூடுதலாகவும் அமைவது மக்கள் நலன் சார்ந்த வரிக்கொள்கையாகக் கருதப்படும். நம்நாட்டில் இன்று நிலைமை இவ்வாறாக இல்லை என்பது வெளிப்படை. இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நேரடி வரிகள் விதிப்பு கொள்கையில் விரிவான மாற்றங்களை கொண்டு வரும் நோக்கத்துடன் கடந்த 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தில் செய்யப்படஉள்ள திருத்தங்களை புதிய நேரடி வரிக்கொள்கை என்ற பெயரில் வரைவு அறிக்கையாகத் தயாரித்து விவாதத்திற்கு வைத்திருந்தது1. கடந்த 2009 ஆகஸ்ட் 12-ம் தேதி மத்திய நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி இந்தக் கையேட்டை அறிமுகப்படுத்தி அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கோரியிருந்தார்.

1. இக்கையேட்டில், வரிவிதிப்புச் சட்டங்களை சாமானியர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிமைப்படுத்திக் கொடுப்பதும், வரிவிதிப்பு தொடர்பான நீதிமன்ற வழக்கு இழுத்தடிப்புக்கான வாய்ப்பைச் சுருக்குவதும், இந்த புதிய முயற்சியின் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

2. நேரடி வரிகள் அனைத்தையும் வருமான வரி, லாப பங்கீடு (Devident) மீதான வரி, பணமாக அன்றி இதர வகையில் பெறப்படும் சலுகைகள் மீதான வரி மற்றும் சொத்துவரி ஆகிய நான்கும் ஒரே வரிவிதிப்புக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மாத வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதுவரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகள் பலவும் வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்படும். விடுப்பு நாள்களை ஒப்படைத்து அதற்கு ஈடாகப் பெறப்படும் பணப்பயன், சில விசேசப்படிகள், விடுப்பு பயணச்சலுகை, மருத்துவச் செலவுகளுக்குப் பணம் வழங்குவது, வீட்டு வாடகைப்படி அல்லது சலுகை வாடகையில் குடியிருப்பு வசதி போன்றவையெல்லாம் இனி வரிவிதிப்புக்குள்ளாகும். அதைவிடக் கொடுமை வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு சேமிப்புகளுக்கு அவற்றை திரும்பப்பெறும் கட்டத்தில் (பணி ஓய்வின்போது, பணியைவிட்டு செல்கையிலோ) அந்தத் தொகைகள் அனைத்தின் மீதும் வரி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

            மேலும் இந்த வரைவு அறிக்கை பாராளுமன்றத்தின்; மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும் என்றும் இந்தச் சட்டம் 2011 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வரைவு அறிக்கையின் மேல் கடும் சர்ச்சைகள் எழுந்தது. எனவே இவ்வறிக்கை பற்றி பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு திருத்தங்களுடன் 2010 ஜீன் 14 அன்று மீண்டும் புதிய வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டது. மேலும் திருத்தப்பட்ட இந்த வரைவு அறிக்கையின் மீதான கருத்துக்களை ஜீன் 30-க்குள் தெரிவிக்குமாறும் அரசு கோரியிருந்தது2.

புதிய வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள சில முக்கிய திருத்தங்கள் :

            திருத்தங்களுடன் வெளியிடப்படும் வரைவு அறிக்கையில் அரசு வருமான வரி விதிப்பு அளவுகளில் (TAX Slab) மாற்றம் செய்யும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வரிவிதிப்பு அளவுகளில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்ததே தவிர என்ன மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படவில்லை. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்கேட்ட பின்பே வரிவிதிப்பு அளவுகள் குறித்து அரசு முடிவு எடுக்கும் என்றும் மக்களவையில் இந்த நேரடி வரிகள் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும்போது வரிவிதிப்பு அளவுகள் தெரியவரும் என்றார்.

1. புதிய வரைவு அறிக்கையில் ஆண்டுக்கு ரூ.1.6 - ரூ.10 லட்சம் வருவாய் பிரிவினருக்கு 10% வரியும், ரூ.10 - ரூ.25 லட்சம் வருவாய் பிரிவினருக்கு 20% வரியும், ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உள்ளவருக்கு 30% வருமான வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. (இப்போதைய நிலையில் ரூ.1.6 - ரூ.3 லட்சம் வருவாய் பிரிவினருக்கு 10% வரியும், ரூ.5 - ரூ.8 லட்சம் பிரிவினருக்கு 20% வரியும், ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உடையோருக்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது).


2. சேமநல நிதி, பொது சேமநல நிதி, மற்றும் ஓய்வூதியத்திலிருந்தும் பணம் எடுக்கும்போது வரிவிதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு மாதச்சம்பளம் வாங்குவோர் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பாதுகாப்புத்துறையில் ஊழியர் அமைப்பான, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (All India Defence Employees Federation) கடந்த மார்ச் 15-ம் தேதியன்று இந்த சரத்துக்களை திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது.

            பிஎஃப் மற்றும் ஓய்வூதியத்திலிருந்து பணம் எடுக்கும்போது வரிவிதிக்கும் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வட்டியாக செலுத்துபவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் வரிச்சலுகைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

II. நேரடி வரிகள் ஒழுங்குமுறை மசோதா

            அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதியன்று மத்திய அமைச்சரவை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. நேரடி வரிவிதிப்பிற்கான நெறிமுறைகள் (Direct Taxcode-DTC) என்று அழைக்கப்படும் இந்த வரைவு அறிக்கை, நேரடி வரிகள் ஒழுங்குமுறை மசோதா என்ற பெயரில் (Direct Taxcode Bill) கடந்த 30.08.2010 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது3. பாராளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்குப்பின்னர் (Parlimentry selection Committee) பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்பின்னர் இந்த வரிவிதிப்பு அளவுகள் மத்திய பட்ஜெட்டில் ஒரு பகுதியாக இல்லாமல் மத்திய அரசின் சட்டமாக மாறிவிடும். அதனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றங்கள் ஏதும் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கோ அல்லது 10 ஆண்டுகளுக்கோ கூட அமலில் இருக்கும். இடையிலே வரம்புகளில் மாற்றம் தேவையென்றால் பாராளுமன்றத்தை அணுகி ஒப்புதல் பெறவேண்டும். ஆண்டுதோறும் பட்ஜெட்டில் வரிவிகிதங்கள் அறிவிக்கப்படமாட்டாது. மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கையின் வாயிலாக மாற்றங்களைச்செய்ய முடியாது.

புதிய அறிக்கையில் அமைச்சரவை செய்துள்ள மாற்றங்கள்:

            முன்பு ரூ.1லட்சத்து 60 ஆயிரம் வரை வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. மசோதாவில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10சதவிகிதமும், ரூ.5லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகிதமும், ரூ.10 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு 30 சதவிகிதமும் வரி விதிக்கப்படும்.

            தனிநபர்வரிவிதிப்பு மற்றும் வரிவிதிப்புஅளவுகள் சம்பந்தமாக தற்போதைய நடைமுறை / முதல் வரைவு அறிக்கையின் பரிந்துரைகள் / மசோதாவில் முன்வைக்கப்பட்டவைகள் சம்பந்தமாக ஓர் ஒப்பீட்டிற்காக கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்ப்போம்.


            இந்த மசோதா அமல்படுத்துவதன் மூலம் அரசிற்கு ரூ.53,172கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் எனவே 2012 - 13-ல் வரிவருவாய் ரூ.5 லட்சத்து 25கோடியாகத்தான் இருக்கும் என்றும் கடந்த 30.08.2010 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதித்துறை செயலாளரான திரு.சுனில்மித்ரா அவர்கள் தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு 2011 ஏப்ரல் முதல் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று முன்னதாகத் தெரிவித்த கருத்துக்கு மாறாக 2012 ஏப்ரல் முதல்தான் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் வரிசெலுத்துபவர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் புதிய வரிவிதிப்பு பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்துகொள்வதற்காகவும் திட்டமிடுதலுக்காகவும் ஓராண்டு காலதாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்4.

            இனி, நடைபெற்ற பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் பிரச்சனைக்கு வருவோம். முன்னதாக நிதியமைச்சர் அவர்கள் இக்கூட்டத்தொடரில் மசோதா ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவித்தார் அல்லவா? ஆனால் நடந்தது என்ன? கடந்த நவம்பர் 9-ம்தேதி தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தால் பாராளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியதால் மக்கள் வரிப்பணம் ரூ.146 கோடி வீணானதுதான் மிச்சம். நேரடி வரிகள் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படவேயில்லை.

            இந்நிலையில் உலக நிதி ஒழுங்குநிலை அமைப்பின் சார்பாக நிதித்துறை முறைகேடுகள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விசயங்களுக்கும் வரிகள் மசோதாவிற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரில் இம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்பொழுது திட்டவட்டமாக சில பிரச்சனைகளை எழுப்பி மசோதாவில் திருத்தங்களை நாம் கோரவேண்டியுள்ளது.

III.. நேரடி வரிகள் மசோதாவில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள்

            அமெரிக்காவில் உள்ள பன்னாட்டுக் கொள்கை மையம் என்ற நிறுவனத்தின் நிதி ஆராய்ச்சி பிரிவான உலக நிதி ஒழுங்கு நிலை (Global Financial Integrity-GFI) என்ற அமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச நிதியத்தின் பொருளாதார வல்லுனராக பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு மேற்கொண்ட சர்வதேச நிதித்துறை முறைகேடுகளைப்பற்றியதாகும்.

            இந்த அறிக்கையின்படி விடுதலை பெற்ற இந்தியாவில் 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் சுமார் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் கோடி இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் 68% (620000 கோடி ரூபாய்) 1991-ம் ஆண்டுக்குப்பின் வெளியேறியுள்ளது. அதாவது 60 ஆண்டுகளில் கடத்தப்பட்ட பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு கடந்த 20 ஆண்டுகளில் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டுள்ளது5.

வரி நிர்ணயமும், வரி ஏய்ப்பும்:

            இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட காலத்தில் பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் “வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான வரி விகிதமும் அதிகரிக்க வேண்டும்” என்றிருந்த முந்தைய அரசுகளின் கண்ணோட்டம் கைவிடப்பட்டது. வருமான வரி அதிகமாக இருப்பதால்தான் பலரும் வரிஏய்ப்புச் செய்கிறார்கள் என்றும் அதிகபட்ச வருமானவரி 30% மேல் இல்லாமல் இருந்தால் எல்லோரும் நியாயமாகவும், நேர்மையாகவும் தங்களது வருமானத்தை வெளிப்படுத்தி வரி செலுத்தி விடுவார்கள் என்றும் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர்கள் வாதிட்டார்கள். வரி ஏய்ப்பை முற்றிலுமாக ஒழிக்கவும், கருப்பு பணமே இல்லாத பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவும் உலக வங்கியின் சார்பில் இவர்கள் முன்வைத்த உத்தி இதுதான்.

            ஆண்டுக்கு 5 லட்சம் வருமானம் உள்ளவரும், 500 லட்சம் வருமானம் உள்ளவரும் 30 சதவிகிதம் வரி கட்டுவது என்பது பகுத்தறிவிற்கு ஒவ்வாதது என்று சுட்டிக்காட்டபோது இக்கருத்துகள் எள்ளி நகையாடப்பட்டு நிராகரிக்கப்பட்டன. இக்காலத்தில் மாத வருமானம் பெரும் மத்திய தரக் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக வரிவலைக்குள் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் பெருவாரியோர் நேர்மையாக வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, 30 சதவிகிதம் அதிகபட்ச வரிவரம்பால் பயனடைந்தவர்கள் பன்னாட்டு நிறுவனர்களும், கோடியில் வருமானம் உள்ள பிரிவினர்களும்தான். இதனால் அரசிற்கு எவ்வித பயனும் இல்லை. வரி ஏய்ப்பும், கருப்பு பணமும் ஒழியவில்லை என்பதுதான் உலக நிதி அறிக்கையின் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மையாகும். வரிவிகிதத்தைக் குறைப்பதால் வரிஏய்ப்பு குறைந்துவிடும் என்ற வாதத்திற்கு முன்னுதாரணமாக பொதுவாக அமெரிக்காவையே காட்டுகிறார்கள். நாம் அமெரிக்காவையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். அந்நாட்டில் 2 சதம் அல்லது 3 சதம் கலால் வரி உள்ள பொருள்களில் வரி ஏய்ப்புச் செய்த குற்றத்திற்காக ஆண்டுதோறும் அபராதம் செலுத்தும் எண்ணிக்கை நாளும் உயர்கிறதே தவிர குறைவில்லை என்பதுதான் உண்மை6.

நேரடி வரிகள் மசோதாவும், அதிகபட்ச வரிவரம்பும்:

            இந்நிலையில்தான் தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கான முன்வைக்கப்பட்டிருக்கும் நேரடி வரிகள் மசோதாவில் அதிகபட்ச வரிவரம்பு பற்றிய சரத்து மீதான விமர்சனங்களை முன்வைத்து திருத்தங்களைக் கோரவேண்டியுள்ளது. இந்த மசோதாவில் ரூ. 10 லட்சம் மேல் வருமானம் பெறும் அனைவருக்கும் 30 சதவிகிதம்தான் அதிகபட்ச வருமான வரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 240 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து வரிசெலுத்தாமல் வெளியேறுகிறது என்று உலக நிதி ஒழுங்கு நிலை அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ள நிலையில் இந்த வரி நிர்ணயம் ஒரு அநீதியாகும்.

அதிகபட்ச வரி வரம்பில் திருத்தம் கோருவோம்:

            முன்னதாக நேரடி வரிகளுக்கான வரைவு அறிக்கையில் மாத வருமானத்தினர் மற்றும் மத்திய தர வர்க்கத்திற்கு விரோதமாக முன்வைக்கப்பட்டிருந்த சரத்துகள் கடும் எதிர்ப்பின் காரணமாக அரசு விலக்கிக்கொண்டது (அரசு சேமநல நிதி, பொது சேமநல நிதி, ஓய்வு ஊதியத்திலிருந்து பணம் எடுக்கும்போது வரி விதிக்க பரிந்துரைக்கும் சரத்துக்கள்) அரசின் இந்த நடவடிக்கையில் மட்டும் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது. மேலும் கடந்த 12.01.2011 அன்று நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் தற்பொழுதுள்ள வருமான வரி வரம்பை ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டுமென்று நிதியமைச்சகம் வலியுறுத்தின. இது ஒரு சரியான முன்வைப்புதான் என்றபோதும் இத்துடன் நிறுத்திக்கொள்ளக்கூடாது. மாறாக, உலக நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கீழ்க்கண்ட விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். “சட்ட விரோதமாக இந்தியாவிலிருந்து வெளியேறிய நிதியை தடுத்திருந்தால் 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிலிருந்த 23060 கோடி டாலர் வெளிநாட்டு கடன்களையும் அடைத்திருக்க முடியும். எஞ்சுகின்ற தொகையை வறுமை ஒழிப்பிற்கு பயன்படுத்திருக்க முடியும்”.

            எனவே, எதிர்வரும் பிப்ரவரி 2011-ல் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2012 ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ள நிலையில்7, வரி வரம்பில் திருத்தம் கோரி விவாதங்களையும், மக்கள் இயக்கங்களையும் முன்னெடுக்கவேண்டும்.

ஆதாரம்:

1. Direct Tax Code. www.Fin.min.nic.in
2. Revised Direct Tax Code. www.Fin.min.nic.in
3. Direct Tax Bill. www.Fin.min.nic.in
4. The Hindu, Tiruchirappalli Edition 31.08.2010.
5. The Drivers and Dinamics of Illicit Financial Flows From India 1948 – 2008 Authored by Dr.Kar. http://india.gfip.org.
6. தினமணி திருச்சிராப்பள்ளி பதிப்பு, தலையங்கம் 19.11.2010.
7. The Hindu, Tiruchirappalli Edition 15.12.2010.









வெள்ளி, 21 ஜனவரி, 2011

கருத்தரங்க அழைப்பிதழ்



 1938 - 1939 சன - 15, மார்ச் 11, 1965 சன - 25
மொழிப்போர் தியாகிகள் தொடங்கி...
2009 சன - 29,
தியாகி முத்துக்குமார் வரை


கருத்தரங்கம்

26.1.2011 புதன் மாலை 5 மணி,
மணியம்மையார் மழலையர் பள்ளி,
வடக்குமாசி வீதி, மதுரை 1

தலைமை
தோழர் பாட்டாளி
பொதுச் செயலாளர் த.ம.ப.க

வரவேற்புரை
த. அருள்மொழி த.ம.ப.க

கருத்துரை

பா. செயப்பிரகாசம்
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
பேரா. அறிவரசன்
நாகை. திருவள்ளுவன்
தலைவர், தமிழ்ப் புலிகள்
பி. வரதராசன்
தலைவர், புரட்சிக் கவிஞர் மன்றம்
லோகசங்கர்
துணைத் தலைவர், த.ம.ப.க
சிற்பிமகன்
துணைத் தலைவர், த.ம.ப.க

நன்றி உரை
க. இராம்குமார் த.ம.ப.க

1965 மொழிப்போர் போராளிகள்
பா.செயப்பிரகாசம்
ஐ.செயராமன் ஆகியோர்
கௌரவிக்கப்படுகிறார்கள்

தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
தொடர்புக்கு : 94431 84051