மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 23
கவிஞர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், கல்வி சார் பயிற்சியாளர், கருத்தாளர் மற்றும் லால்குடி அறம் தமிழ் வளர்ச்சிப் பேரவையின் அமைப்பாளர் திரு. எஸ்.டி.ஜி. இளஞ்சேட்சென்னி அவர்கள்.
இலால்குடி வட்டம், வாளாடியைச் சேர்ந்த எஸ் டி ஜி. இளஞ்சேட் சென்னி அவர்கள் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர். கடந்த ஓராண்டு காலமாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
துவக்கத்தில் பாக்யா இதழில் கவிதை எழுத ஆரம்பித்தவர் பிறகு முத்தாரம், கல்கண்டு, ராணி, குங்குமம், குமுதம், ஆனந்த விகடன், போன்ற வார இதழ்களில் கவிதைகளும், நகைச்சுவைத் துணுக்குகளும் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக வெளிவரும் செய்தி இதழ், நாளேடுகளின் இணைப்புகளான தினத்தந்தி குடும்பமலர், தினமலர் சிறுவர் மலர் ஆகிய இதழ்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
கன்னிக்கோயில் திரு. ராஜா அவர்களின் 'தேநீர் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ', வாசகன் பதிப்பகத்தின் மூலம் 'கவித்துளி' என்கிற தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றோடு திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் மற்றும் பொதிகை தொலைக்காட்சியில் கல்வி சார் நிகழ்ச்சிகள் வழங்கி இருக்கிறார்.
போல்ட் விருது, அன்பு பாலம் விருது, கவிச் சிந்தனை சிற்பி விருது, ஆற்றல் மிகு ஆசான் விருது. அறப்பணிச் செம்மல் விருது போன்ற பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். கூடிய விரைவில் கவிதை நூலும், ஹைக்கூ நூலும் வெளியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரின் முயற்சி வெற்றி பெற நாமனைவரும் வாழ்த்துவோம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக