மாயாவதி அரசின்
புதிய நில கையகப்படுத்தும் கொள்கை
சு.அழகேஸ்வரன்
நொய்டா கலவரத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து நிவாரணம் அளிக்கவும், நிலம் கையகப்படுத்துவது குறித்து புதிய கொள்கை வகுப்பதற்காக விவசாய பஞ்சாயத்து நடத்தப்படும் என்று மாயாவதி தெரிவித்ததால் இதன்படி கடந்த 02.04.2011 அன்று விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் மாநிலத்தில் புதிய நில கையகப்படுத்தும் கொள்கையை அறிவித்தார். மேலும் அவர் இக்கொள்கையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் நாடு முழுவதற்கும் இக்கொள்கையை ஐக்கிய முன்னனி அரசு அமுல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் நாட்டிலேயே தமது அரசு மட்டும்தான் விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் இக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கடந்த 2010 செப்டம்பர் 3க்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள உத்திரபிரதேச அரசின் இந்த இரண்டாவது நிலக்கொள்கையின் முதல் பகுதியில் சொல்லப்பட்டுள்ளதாவது, இனி புதிய திட்டத்திற்கு நிலத்தை அரசு கையகப்படுத்தாது. திட்டத்தை அமல்படுத்தும் தனியார் நிறுவனங்களே விவசாயிகளிடமிருந்து நேரடியாக நிலத்தைக் கையகப்படுத்தும் நிறுவனங்களும் சேர்ந்து நிர்ணயித்துக் கொள்ளும். இதில் அரசின் பங்கு திட்டத்தை தீட்டி அதற்கு அனுமதி அளிப்பதுதான் (Facilitator).
ஒரு பகுதியில் நிலம் கையகப்படுத்த வேண்டுமானால் அப்பகுதியைச் சேர்ந்த 70 சதவீத விவசாயிகள் அதற்குச் சம்மதிக்க வேண்டும். அப்போது மட்டுமே அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படும். அவ்வாறு சம்மதிக்காவிட்டால் அத்திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்யும். மேலும், கையகப்படுத்தும் நிலத்தில் 16 சதவீதம் பகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு (Allotment or developed Land) கையகப்படுத்தும் நிறுவனங்களே அப்பணிகளை மேற்கொள்ளும். வளர்ச்சிப் பணிகள் நிறைவுற்ற பின்னர் திரும்பி விவசாயிகளுக்கு அளிக்கப்படும். மேலும் 33 வருடங்களுக்கு மானியமாக ஆண்டிற்கு ரூ.23,000 அளிக்கப்படும் அல்லது ஆண்டிற்கு ரூ.23,000 இழப்பீட்டுத் தொகையாக அளிக்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் ரூ. 800 உயர்த்தப்பட்டு இது ஒரு ஏக்கருக்கு இழப்பீட்டு தொகையாக அளிக்கப்படும்.
வருடாந்திர மானியத் தொகை வேண்டாதவர்களுக்கு மாநிலத்தின் Relief and Rehabilitation -2010 சட்டத்தின் படி ஏக்கருக்கு ரூ.2.40 rehabilitation grand ஆக அளிக்கப்படும். இரண்டாம் பகுதியில் விளை நிலத்தை அளிக்கும் விவசாயின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும். அத்துடன் அக்குறிப்பிட்ட நிறுவனத்தில் 25% பங்குகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் நிலம், கையகப்படுத்தும் நடவடிக்கை முற்றிலுமாக விவசாயி-நிறுவனங்கள் ஆகிய இருவரின் சம்மதத்துடன் (Through a consensual Approach) மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாநில தேர்தலை முன்னிட்டு இந்த நிலப்பிரச்சனையில் தீவிரமாக தலையிட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட முடிவாக இந்த புதிய நிலக்கொள்கை கருதப்படுகிறது. திருமதி. சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு வடிவமைத்துள்ள வரைவு மசோதாவை ஒப்பிடும் பொழுது மாயாவதி அரசின் புதிய நிலக்கொள்கை முக்கிய அம்சங்களில் வேறுபடுகிறது. அதாவது தனியார் நிறுவனங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இனிமேல் நேரடியாக ஈடுபடாது. அத்துடன் வளர்ச்சி திட்டங்கள் நிறைவடைந்த பின்னர் 16 சதவீத நிலம் விவசாயிகளுக்கு திரும்பி அளிக்கப்படும், மேலும் வாழ்வாதாரங்களை இழந்த விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.23,000 மானியமாக 33 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும் என்ற சரத்துக்கள் இந்த புதிய கொள்கையின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
இதனிடையே மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பருகுணா ஜோசி அவர்கள் நொய்டா கலவரத்தை எதிர்த்து திரு. ராகுல் காந்தி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இப்பிரச்சனை தேசிய அளவில் விவாதத்திற்குள்ளானது. இதன் விளைவாக ஏற்கனவே மத்திய அரசின் நில கையகப்படுத்தும் சரத்துக்களை எடுத்துக் கொண்டு மாயாவதி தனது புதிய நிலக் கொள்கையாக அறிவித்துள்ளார். இக்கொள்கை விவசாயிகளுடன் பரந்தளவு விவாதம் மேற்கொள்ளப்படாமல் அறிவிக்கப்பட்டதாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கொள்கை பின் தேதியிட்டு அறிவிக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பாட்டா-பர்சௌல் இக்கொள்கையினால் பயனேதுமில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இப்புதிய கொள்கையில் வளர்ச்சிப்பணிகளுக்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் அக்குறிப்பிட்ட நிறுவனத்தில் பங்குதாரராகவும் ஆக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வளர்ச்சி பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் 16 சதவீதம் விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதல்லவா? இந்தச் சரத்துக்களை பொருத்தமட்டில் 16 சதவீதம் என்பதை நிலையானதாகக் கொள்ளக் கூடாது, மாறாக அங்கே அமையவிருக்கும் தொழிற்கூடங்களின் தன்மை தங்கள் நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
இந்த கருத்தையே சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமானால் இயற்கை வளங்கள் உள்ள பகுதிகளை கையகப்படுத்தும் போது எத்தகைய இழப்பீடு மற்றும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது குறித்து அசோக் சாவ்லா கமிட்டி அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதில் கனிம சுரங்கங்கள் அமைப்பதற்காக அல்லது நிலக்கரி, பெட்ரோலிய பொருட்களை எடுப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் போது அந்த தொழிற்கூடங்களின் மதிப்பிற்கேற்ப இந்த நிலத்தின் மதிப்பு எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்கிற பார்முலாவை இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்த பார்முலாவை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சிப்பணிகளுக்கான நிலத்தின் சதவீதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்( Percentage of allotment or developed land). மேலும், நிறுவன பங்குதாரர்கள் என்ற நடைமுறை பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகும். சிறு விவசாயிகள் இந்த நடைமுறையை அறிந்து செயல்படுவது சிரமம் என்றும் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக