உலகமயம் உழைக்கும் மக்களின் வாழ்வை, அவர்களின் வாழ்வாதாரங்களை மிகக் கொடூரமாய் அழித்து வருகிறது. குரூரமான அதன் கோர முகத்தை இதுவரை எந்த உலகப் புகழ் பெற்ற ஓவியனாலும் சித்தரிக்க இயலவில்லை.
முன்பு தனியார் செய்தவைகளை எல்லாம் இன்று அரசுகள் செய்து வருகின்றன. அரசுகள் செய்ய வேண்டியவைகளையெல்லாம் தனியார்கள் செய்து வருகிறார்கள். முன்பு சாராயம் காய்ச்சி விற்றவர்கள் கல்வி வணிகத்தில் இறங்கிவிட, கல்வித் தந்தைகளாகி விட, கல்வியும் மருத்துவமும் தர வேண்டிய அரசுகள் இன்று சாராயம் விற்றுக் கொண்டிருக்கின்றன.
"அவர் என்ன வேலை செய்கிறார்? அவரா? தரகு வேலை செய்கிறார்" என்றால், அவரை மிக இழிவாகப் பார்ப்பது எமது பால்ய காலப் பண்பாடு. இன்று அதே வேலைகளை மக்கள் நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று சொல்லப்படுகிற அரசுகள் செய்து வருகின்றன.
விளை நிலங்களை உழைக்கும் மக்களிடமிருந்து பறித்து, பன்னாட்டு ஏகாதிபத்தியங்களுக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்து வருகின்றன மக்கள் நலங்களைக் காக்க வேண்டிய அரசுகள். இந்த இழிசெயல்களைத் தோலுரிக்கும் வண்ணம், தமது எழுத்துக்களை, கட்டுரைகளைத் தொடர்ந்து தரவிருக்கிறார் நமது தோழர் அழகேஸ்வரன் அவர்கள்.
இன்று உத்திரப்பிரதேசத்தில் பற்றி எரியும் இந்த பிரச்சனையில் ஆரம்பித்து, தொடர்ந்து இந்தியா முழுமைக்குமாய் விரிக்க இருக்கிறார். வாருங்கள். அவரோடு சேர்ந்து பயணிப்போம்.
தோழமையுள்ள........
பாட்டாளி
உத்திரபிரதேச விவசாயிகள் போராட்டம்
சு.அழகேஸ்வரன்
உத்திரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிராமத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்திரபிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காவல் துறையினர் உள்பட நால்வர் இறந்திருக்கிறார்கள்.
மாயாவதி அரசாங்கமானது, கிரேட்டர் நொய்டாவிலிருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஜே.டி. அசோசியேட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக கவுதம் புத் நகரிலிருந்து ஆக்ரா வரை 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலங்கள் விவசாயிகளிடமிருந்து கையகப் படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், கையகப்படுத்துதல் என்பது இத்துடன் முடிந்துவிடவில்லை.
யமுனா எக்ஸ்பிரஸ் பாதை தொழிற் வளர்ச்சிக் குழுமம் (The Yamuna Express way Industrial Development Authority) எக்ஸ்பிரஸ் பாதையைச் சுற்றிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களையும், விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி அதன்பின்னர் அவற்றை பத்திலிருந்து இருபது மடங்கு விலை வைத்து ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. வீடுகள் கட்டும் கட்டிடக்காரர்களுக்கும் (builders), ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் அவ்வாறு பெற்ற நிலங்களை நூறு மடங்கு விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கின்றன.
2010 டிசம்பரிலிருந்து உத்திரப் பிரதேச மாநில அரசாங்கமானது அறிக்கை வெளியிட்டது. அதன்படி யமுனா எக்ஸ்பிரஸ் பாதை செல்லும் 6 மாவட்டங்களில் உள்ள 1187 கிராமங்களை யமுனா எக்ஸ்பிரஸ் பாதை தொழிற் வளர்ச்சி அதிகார குழுமத்தின் கீழ் கொண்டு வந்தது. இப்பகுதியில் நகர்புற மையங்களும் (Urban centre’s) தொழிற்பேட்டைகளும் (Industrial areas) கட்ட வேண்டும் என்பதே இக்குழுமத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியாகும்.
நொய்டாவிற்கும் கிரேட்டர் நொய்டாவிற்கும் இடையில் உள்ள நிலங்களை கையகப்படுத்துதலில் என்ன நடைபெற்றது? இப்பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும்போது, ஒவ்வொரு 300 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்திற்கும், விவசாயிகளுக்கும் தலா 50 ரூபாய் என்கிற முறையில் தரப்பட்டது, ஆனால், இன்று அதே இடத்தில் ஜே.பி. கம்பெனி 2500 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கிறது. இக்கம்பெனி இங்கே மனைகளை ஒரு சதுர மீட்டர் 15 ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் விற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு 50 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கி, அதே நிலத்தை 15 ஆயிரம் விற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் விவசாயிகளை கோபமடைய வைத்திருக்கிறது.
யமுனா எக்ஸ்பிரஸ் பாதை நெடுக இவ்வாறு கடந்த ஓராண்டு காலமாக நிலங்களை விற்ற விவசாயிகள் தற்போது கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அலிகார் மாவட்டத்தில் தப்பால் என்னுமிடத்தில் 2010 ஆகஸ்டில் விவசாயிகள் கிளர்ச்சி & போராட்டம் நடத்திய சமயத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு மூவர் பலியாகினர். மதுரா, ஆக்ரா மற்றும் கவுதம்புத் நகர் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகளின் கிளர்ச்சி & போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற மே 11ல் நள்ளிரவில் ராகுல் கைது தொடர்ந்து, பி.ஜே.பி யின் முன்னால் தலைவர் ராஜ்நாத்சிங், லோக் ஐன சக்தி தலைவர் ராம்விலாஸ்பஸ்வான், ராஷ்ட்டிரிய லோக்தல் தலைவர் அஜீத் சிங் போன்றவர்களும் கைதானார்கள். விவசாயிகள் பிரச்சனையாக ஆரம்பித்த ஒன்று கிடுகிடுவென ஒரு சில நாட்களில் நாடுதழுவிய சூடான அரசியல் பிரச்சனையாக உருவானதோடில்லாமல், முக்கியமான சில விவாதங்களையும் சமூக வெளிக்கு கொண்டு வந்துள்ளது.
போராட்டக்களம் எழுப்பியுள்ள முக்கிய விவாதங்கள்
நாட்டில் இதர மாநிலங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ராகுல் உள்பட இந்த அரசியல் தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை, உண்மையில் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பரிவு கொண்டு போராட்டத்தில் தலையீடு செய்யவில்லை, மாறாக 2012 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் தேடுவதற்குத்தான் இப்பிரச்சனையில் தலையிடுகிறார்கள் என்ற விவாதம் முன்னெழுந்துள்ளது.
மேலும், இப்பிரச்சனை நில ஆர்ஜித சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்று ஒரு சாரரும், அண்மையில் இப்பிரச்சனை நில ஆர்ஜிதம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல நாட்டின் வளர்ச்சி குறித்த பிரச்சனைதான் என்று மேதாபட்கர் போன்ற சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். நில கையகப்படுத்தும் சட்டத்தின் தேவையை இப்பிரச்சனை உணர்த்துகிறது என்றாலும் மயாவதி போன்ற அரசுகள் இருக்கும்வரை எந்த சட்டமும் விவசாயிகளுக்கு பயனளிக்கப் போவதில்லை என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
உண்மையில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்தின் விளைவுகளை மாயாவதி அரசு மூடி மறைக்கவும், நியாயப்படுத்தவும் முயலுகின்ற அதே வேளையில் அந்த அரசின் பிரதிநிதிகளில் ஒரு சாரார் மாயாவதி அரசு கையகப்படுத்தும் விசயத்தில் குஐராத் மாநில மாதிரிகளைப் பின்பற்றவில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்கள்
அதே வேளையில் சமூக ஆர்வலர்கள் இப்பிரச்சனைக்குக் காரணம் நில கையகப்படுத்தும் நடைமுறைகளில் உருவானதுதான். எனவே, நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகின்றனர்.
ராகுல் காந்தியும், அஜீத்சிங்கும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திய பின்னர் நில கையகப்படுத்தும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுதான் உடனடித் தேவை. எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்படும் என்று பிரதமர் திரு. மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு படி மேலே போய் சோனியா காந்தியின் தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு இந்த நில கையகப்படுத்தும் சட்டத்தின் வரைவு அறிக்கையில் செய்யப்பட்ட திருத்தங்கள், சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி பேசி வருகின்றன. மேற்கண்ட விவசாயிகள் பிரச்சனை ஏராளமான சர்ச்சைகளுக்கு வித்திட்டாலும் பிரதமர் உள்பட பெரும்பான்மையானோர் நில கையகப்படுத்தும் சட்டத்தின் தேவைபற்றி வலியுறுத்தி வருகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே, நாமும் இந்த நில கையகப்படுத்தும் சட்டம் குறித்த விவாதங்களில் சற்று கவனத்தைக் குவிக்கலாம் எனக் கருதுகிறேன்.
நில கையகப்படுத்தும் சட்டம் :
வரைவு அறிக்கை குறித்த விவாதங்கள்
அரசு தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கு இன்றைக்கு இருக்கும் ஒரே சட்டம் நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 1894 (The Land Acquisisation Act 1894) ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும் அடிப்படையில் மாற்றம் ஏதுமில்லை.
இச்சட்டத்தின்படி அரசு தனக்கு தனியார் இடம் தேவைப்பட்டால் ஒரு நோட்டீஸ் அளித்து விட்டு அரசு நிர்ணயித்த விலையை கொடுத்தால் போதும். அரசின் பொதுக்காரியங்களுக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டால் தனிநபர் சுதந்திரத்தில் குறுக்கீடு என்று வழக்குப் போட முடியாது. அதிகபட்சம் நிர்ணயிக்கப்பட்ட விலையை மறுபரிசீலனை செய்யக் கேட்டு விலையை நிர்ணயித்த அதிகாரியிடம் மனுப் போடலாம். ‘அரசு’ என்பது “நோட்டீஸ் அளிக்கும் அரசைக் குறிக்கும்” என்று விளக்கம் சொல்லப்பட்டிருப்பதால் மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்றாமல் இதையே பயன்படுத்துகின்றன. மேலும் பொது நலம் (பப்ளிக் இன்ட்ரஸ்ட்) என்பது எவை என நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, தற்போது பல்வேறு மாநில அரசுகள் பொது நலன் என்ற பெயரில் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தி வருவதை எதிர்த்து நியாயமான விலை அளிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுவதற்காக இச்சட்டத்தில் புதிய திருத்தங்கள் செய்வதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 2007 ஆம் ஆண்டு "நிலம் கையக (திருத்த) மசோதா" உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் அரசு நிறைவேற்றவில்லை. தற்போது உத்திரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தின் விளைவாக இச்சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த புதிய வரைவு மசோதா முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று பிரதமர் தற்போது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த மே 18 ஆம் தேதியன்று வாரணாசியில் பேசிய சோனியா காந்தி, நில கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இப்பிரச்சனை பற்றிய ஒரு வரைவு அறிக்கையை உருவாக்குவதற்காக அவர் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழுவில் ஒரு பணிக்குழு உருவாக்கப்பட்டு வரைவு அறிக்கையும் உருவாக்கப்பட்டது. அந்த வரைவு அறிக்கை பற்றி மே 25ஆம் தேதியன்று ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் விவாதித்தார்கள். இதுபற்றி மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. தேஷ்முக் அவர்கள் "உருவாக்கியுள்ள வரைவு அறிக்கையில் சில விவாதங்கள் இருப்பதால், அந்தப் பரிந்துரைகளை தனது அமைச்சகம் இறுதிப்படுத்தி சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும்" என்று தெரிவித்தார்.
புதிய வரைவு மசோதா பற்றி
தேசிய ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகள்:
அரசு கையகப்படுத்தும் நிலத்திற்கு அதன் பாதிப்பை விட 6 மடங்கு அதிகமாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு கையகப் படுத்தப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படவில்லை என்றால் அவற்றை பழைய உரிமையாளரிடமே திரும்ப அளித்து விட வேண்டும். நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசயங்கள் மேற்கொள்ள தேசிய அளவில் கமிஷன் ஒன்றை (National Commission for Land Acquisition. Resettlement and Rehabilitation) (NCLRR) அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்ததையொட்டி இவ்விசயத்தில் மிகவும் அடிப்படையான பிரச்சனையான தனியார் நிறுவனங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய பரிந்துரைகள் எதையும் இக்குழு செய்யவில்லை.
மேலும், விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி மாநில அரசாங்கங்கள் அவற்றை ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கும் நடைமுறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பது பற்றியும் இக்குழு பேசவில்லை. பேசப்போவதும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக